எனக்கும் கடலுக்கும் நிறைய பந்தம் உண்டு
இது வரை
உன் கை கோர்த்து அவள் முன் அமர்திருக்கும் இந்த நிமிடம் யோசிக்கிறேன்
கடலுக்கும் எனக்குமான உறவை பற்றி எண்ணுகிறேன்...
உன்னை தவிர
யாரையும் அவளுக்கு நான் அறிமுகம் செய்து வைத்தது இல்லை
கை பிடித்து இவள் என்னவள் என்று...
அவளுக்கும் எனக்குமிடையே யாரையும் அனுமதித்ததும் இல்லை
வாழ்ந்ததும்
வாழ்வதும்
கடல் உள்ள ஊரில்தான்
எத்தனை நாள் அவளிடம் சென்றிருப்பேன்
இரவின் இருளில் எத்தனை சோகங்களை
அவளிடம் அழுதிருப்பேன்...
அவளும் உப்புக் காற்றால்
சலிக்காமல் என் கண்ணீர் துடைத்திருப்பாள்
நான் அத்தனை முறை அழுது வேறு யாரும் பார்த்திருக்க முடியாது
அவளுள் வரட்டுமா என்று கேட்ட போதெல்லாம்
என்னை எனக்கு உணர்த்துவாள்
நான் யாருக்கெல்லாம் வேண்டும்
என் கடமைகள் என்ன
இப்படி பல சொல்லி என்னை தேற்றுவாள்
இரவின் இருளில் என்னை மகிழ்விக்க அவள் செய்யும் கோலங்கள் பலப்பல
அந்த நட்சத்திரங்களை கட்டி இழுத்து வந்து
கண்சிமிட்டி காற்றில் நடனமாட விடுவாள்
நிலவை தூக்கி வந்து
கதைகள் சொல்ல வைப்பாள்
தென்றல் வீசி
என்னை தூங்க வைப்பாள்
அந்த தென்றலில்
எனக்கு பிடித்த இசையையும் தவழவிடுவாள்
அலைகள் கொண்டு
என்னை தொட்டு விளையாடுவாள்
இன்று உன்னோடு
அவள் முன்
நீ நானானதால்
அவளுக்கும் சந்தோசம் கொள்ளவில்லை
அலைகளால் சாரல் தெளித்து....
No comments:
Post a Comment