Tuesday 31 May 2011

உயிரோடுதான் இருக்கிறேன்



நின்று
நிதானித்து பார்க்கிறேன்
உன்னைத்தான்

என் கற்பனையையும்
உன்னோடே எடுத்துச் சென்றாயோ

எத்தனைதான் நெருங்கி வந்தாலும்
என் தோப்பில் நான் மட்டும் தனி மரமாக...
இறுதி வரை பழகிக் கொள்கிறேன்..

எங்கே நிற்கிறேன்
ஒலியும் இல்லை ஒளியும் இல்லை
மயானமா என்றால் பிணவாடையும் இல்லை...
உயிரோடுதான் இருக்கிறேன்


Saturday 28 May 2011

காதலின் வலி

இன்று
உணரச் செய்தாய்
இதுவரை அறியாத
காதலின் வலியை...
இதுவும் எனக்கு
பிடித்திருக்கிறது
இந்த வலியின் சுகம்
மிகவும் பிடித்திருக்கிறது
உன்னோடு சம்பந்தப்பட்ட எதுவும்
உன் காதலோடு
சம்பந்தப்பட்ட எதுவும்
எனக்கு சுகமே...

நாய்க்குட்டி


உன்னுடன்தான் இருப்பேன்
உன் பின்னேயே வருவேன்
நீ திட்டினாலும்
நீ துரத்தினாலும்
உன் மடியில்தான் புதைந்து கொள்வேன்
உன் வருடலின்
சுகம் வேண்டும்
முகத்தோடு முகம் உரசும்
தருணங்கள் எனக்கானவை
இது காதல்
இங்கே வேறு எதுவும் தெரிவதில்லை
நீ எப்போதும் சொல்வது போல்
நான் உன்
நாய்க்குட்டிதான்

Friday 27 May 2011

இதயம் சேர்வேன்


நான் போவேன் என்று நினைத்தாயோ
இது வேதாளம்
மீண்டும் மீண்டும் வருவேன்
உன் காதல் வேண்டும் என்பேன்
உன் மௌனம் கலைப்பேன்
வலிக்காமல்
உன் மார்பு கிழித்து
இதயம் சேர்வேன்
உள்ளிருந்தே இம்சிப்பேன்.....

எனக்கு இதெல்லாம் புதிதானவை


என்னை விட்டுப் போவாயோ – என்றேன்
என்ன செய்வாய் – என்றாய்
வீழ்வேன் என்று நினைத்தாயோ
இறப்பேன் என்பது தெரியாதோ
இருப்பதை நிறுத்த மாட்டேன்
வாழவும் போவதில்லை
விரல்களில் ஒரு நடுக்கம்
காலில் ஒரு தயக்கம்
நெஞ்சுக்குள்ளே ஒரு வலியின் படபடப்பு
உன் காதலை போலவே
எனக்கு இதெல்லாம் புதிதானவை

Tuesday 24 May 2011

என் சுவாசமாகிறாய்...


என் சுவாசமாகிறாய்...
என் கண்களின்
உள்ளே இருக்கும் கண்ணாடிகள் அனைத்திலும்
நீயே பிம்பங்களாகிறாய்...
என் மூளையின்
திசுக்கள் அனைத்திலும்
நீயே நினைவாகிறாய்...
என் நுரையீரலின்
அனைத்து பைகளிலும்
நீயே சுவசமாகிறாய்...
என் உதிரத்தில் இருக்கும்
உயிராகிறாய்...
என் இதயத்தில் இருக்கும்
எல்லா அறைகளிலும்
நீயே இயக்கமாகிறாய்....