Tuesday 14 February 2012

கண்டதும் கண்டுகொண்டது


அன்றைய இன்றின் நினைவுகளில்
இன்றைய பொழுதை
வாழ்கின்றேன்
அந்த நாளின் நினைவுகள்
வசந்தமான வாசமாய்
வீசுகின்றன சுகமாய்...

இதயத்தை
மெல்லத் தொட்டு
தட்டி தட்டி
காதல் மொட்டுக்களை
ஒவ்வொன்றாய் பூக்கச் செய்கின்றது...

யுகம் யுகமாய்
தொடரும் நேசம் இது
கண்டதும் கண்டுகொண்டது
உனக்காகவே காத்திருந்தது போல்...

உன் சட்டை பொத்தானில்
சிக்கிக் கொண்ட மயிர்போல
உன்னோடு சுற்றுகிறது
என் நினைவுகள்...

மௌனமாய்
ஒரு மூலையில் அமர்ந்து
உன் மௌனத்தை
ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்
புரிய ஆரம்பித்தபின்
இதுவும் அழகாய்த்தான் இருக்கிறது...

நீ விட்டே போனாலும்
இனி நான் வாழ்வேன்
அடுத்து வரும்
அந்த சந்திப்பிற்காக
காத்திருக்க ஆரம்பித்துவிட்டேன்
அடுத்த பிறவியானாலும்...