Thursday 22 March 2012

காற்றுச் சுவர்


எனக்கு நன்றாய் தெரிகிறது -
தள்ளி உட்கார்ந்து இருக்கும்
என்னை
நீ
திரும்பி திரும்பி பார்ப்பது...

நீ பேசும் வார்த்தைகளின்
மிச்சங்கள் கேட்கும் தூரத்தில்
எனக்கு எப்போதும் பிடித்த
உன் வாசத்தை சுவாசித்துக்கொண்டேதான்
நான் அமர்ந்திருக்கின்றேன்...

உன்னை திரும்பிப் பார்க்கும்
ஆசையை
மனதில் பாரமாகவும்
கண்களில் கண்ணீராகவும்
மறைத்துக்கொண்டு
தைரியம் இல்லாமல்
தலை கவிழ்ந்து...

அலட்சியம்
உன் செயலில் தெரிந்தாலும்
ஒளிந்துகொள்ளும் அவசரம்
உன் கண்களில் தெரிகிறது
அந்த படபடப்பில்
உன் எண்ணங்களை
நான் படித்துக் கொள்கின்றேன்...

நீயா நானா
என போட்டியில்
நீயாக எழுப்பிக் கொண்ட
காற்றுச் சுவரை
ஏனோ கையால் விலக்கிவிட
மனமில்லாமல் நீயும்
உன் மனம் நோகுமோ என நானும்...

Wednesday 7 March 2012

எழுந்திருக்கவே மனமில்லாமல்


எத்தனைதான் அடைத்தாலும்
காலத்தின் கதவிடுக்கில் புகுந்து
உன் நினைவுகள்
என்னோடே வந்து
ஒட்டிக் கொள்கின்றன...

விடியல்
இருட்டை விலக்கும் வேளையில்
மிச்சமிருக்கும் முத்தங்களை
உன் இதழ்களில் தேடி
குடித்துக் கொண்டிருக்கிறேன்...

உன் வளைவுகள் படுக்கையில்
விட்டுச் சென்ற கோடுகளை
விரலால் வருடுகிறேன்...

போர்வைக்குள்
பிடித்து வைத்த
உன் வாசத்தில் மயங்கி
எழுந்திருக்கவே மனமில்லாமல்
மயங்குகிறேன்...

நெருக்கத்தின் வேகத்தில்
கழண்டுகொண்ட உன் முடிகள்
என்னை கட்டிக்கொண்டு
இம்சிக்கின்றன...

மூர்ச்சையான நேரத்தின்
வேர்வை ஈரத்தில்
என்
தாகம் தீர்த்துக்கொள்கின்றேன்...

இன்றும் வரும்
அந்த இரவுக்காக
இப்போதிருந்தே காத்திருக்கிறேன்
கதவுகளையெல்லாம்
கழட்டி வைத்துவிட்டு...