Saturday 20 August 2011

இயலாமையில் நான்


வஞ்சகம் நிறைந்த
இந்த உலகில்
உன்னை தனியாக விட்டுவிட்டு
நான் தனிமையில்...

உன் சோகம்
என்னை தீர்க்கமாக தாக்குகிறது
உன் துன்பங்கள்
எனக்கு வலிக்கிறது
என் வார்த்தைகளில்
அவற்றை தீர்க்கும் வலிமை
இல்லாமல் போகலாம்
ஆனால்
மருந்தாகும் ஈரம் கொண்டவை...

நீ வேண்டாம் என்று சொன்ன காதல்
ஒரு புறம் இருக்கட்டும்
முடிந்து போனதாகாவே இருக்கட்டும்
நேசம் தொடர்கிறது
உனக்கான என் மடியும்
உன் சோகத்திற்கான
என் தோளும்
இப்போதும் உனக்காகவே....

உன் பிரிவை விட
கொடுமையானது
நீ துக்கத்தில்
தனியாக
திண்டாடும் தருணங்கள்
துக்கத்தின் காரணம் தெரியாமல்
தீர்க்கும் வழியும் புரியாமல்
இயலாமையில் நான்...

நீ என்னுடன் இல்லாத
தருணங்களை காட்டிலும்
நான் உன்னுடன் இருக்க முடியாத
இந்த தருணங்கள்
மிகவும் கொடுமையானவை...

எனது நேசம்
உன்னை பலவீனப்படுத்துவதாய்
குற்றம் சுமத்தினாய்
அதற்காகவே
ஒதுங்கி இருக்கிறேன்
துன்பங்களை தாண்டி வா...

உன்னால் முடியும்
இது எனக்கும் தெரியும்
இருந்தும்
உன்னை என் மழலையாகத்தான்
பார்க்க முடிகிறது
பரிதவித்து போகிறேன்...

எது எப்படி இருந்தாலும்
எனக்காக
நீ இட்ட இடத்தில்தான் இருக்கிறேன்
தயங்காதே
உன் கை எட்டும் தூரத்தில்தான் இருக்கிறேன்
தனிமையில்...