Tuesday 18 December 2012

காதல் ஓவியம்



என் மென்மலர்களால் உன்னை
வருடிவிட்டுக் கொண்டிருக்கையிலேயே
என் பாம்பு விஷம்
உன்னை பதம் பார்த்துக் கொண்டிருகிறது...

கட்டுக்கள் அவிழ்த்து
பறந்து போகையில்
என் காதல்
உனக்குள் சிறைபட்டுக் கிடக்கின்றது...

இலை வழியே
பூத்துக் குலுங்கிய உன் நேசம்
வேர் வழியே
உன்னை சருகாக்கி
விழுங்கி கொடியாக செழிக்கிறது
நீ அதில் படர்ந்துகொள்கிறாய் அழகிய பூவாக...

எட்டிப் பிடிக்க
துள்ளிக் குதிக்கும் கொடியிலிருந்து
தப்பிப் பறக்கும் பட்டாம்பூச்சி எண்ணங்கள்
வண்ணப் பூக்களின்
வாசனைத் தேனுக்கள்
மீண்டும் சிக்கிக்கொள்கின்றன...

என் இதயத்தோடு சேர்ந்து
உன் அனைத்து இதயமும்
தோரணம் கட்டிக்கொண்டன
உன்னை என்னுள் வரவேற்க...

அந்த மூலையில்
நான்
எப்போதும்போல் சோகமாக
உன்னை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்
பசியோடு...

Thursday 6 December 2012

காணாமல் போய் காயப்படுத்துகிறாய்



நானான நீ
நீயான என்னை
தானாக தழுவிக் கொள்கையில்
நானான நீ
என்னுள் இல்லாமல்
காணாமல் போய் காயப்படுத்துகிறாய்...

வாழ்வின் விளிம்பில்
தொங்கிக் கொண்டிருக்கையிலும்
விடாமல் துரத்தும் துன்பங்கள்
பாரம் தாங்காமல்
கை வலிக்கிறது என
இளைப்பாற வழி தேடுகிறது
நீயேனும் சற்று அணைத்துக் கொள்வாயென
உன்னை பார்க்கிறேன்
நீயோ தூரத்தில் அழகாய் சிரிக்கிறாய்
என் மடியில் ஒய்யாரமாய் படுத்துக்கொண்டு...

உன் மேல் கோவம் வருகிறது
எரிச்சலும் துரத்துகிறது
ஆனால் இந்த காதல் மட்டும்
போக மாட்டேன் என பாடாய் படுத்துகிறது...

எட்டிப் போன என எத்தனை முறை
தள்ளி விட்டாலும்
மீண்டும் வந்து தொற்றிக் கொள்கிறாய்
சுகமான பாரமாக...

Saturday 1 December 2012

இது இந்த நேசத்தின் வரம்



விடை தெரியாத குழப்பங்கள்
சூழும்போதெல்லாம்
உன் மடி தேடி
புதைந்து கொள்வது
வாடிக்கையாகிப் போய்விட்ட்து எனக்கு
உன் சோர்வு காத்திருக்கும்...

தொலந்து விடுமோ
என தேடும் என் புன்னகையும்
உன் விரல் பிடித்து
பத்திரமாய் வந்து
என் இதழ் ஏறி மனம் புகுந்து கொள்கிறது
உன் கண்ணீர் காத்திருக்கிறது...

எத்தனை ஜென்மம் காத்திருந்தேன்
என நினைவில் இல்லை
இப்படி நீ என்னை
ஆட்கொள்ள
உன் தேடல் நானாகிறேன்...

நீ இருக்கிறாய்
என நான் நம்பத் துவங்கிய பின்
நான் அழத் தயங்கியதில்லை
ஒவ்வோரு முறையும்
நீ அணைத்துக் கொள்ள தவறியதில்லை
உனது வலிகளை தாண்டி...

மனதின் வலி பாரமாகும் போதெல்லாம்
உன் தோள்
எனக்கு முன்னே
நான் சாய காத்திருக்கும்
உன் த்லை என் தலை சாயும்...

என் கண்ணீரையும்
உன் கண்ணீர் கொண்டே துடைக்கிறாய்
இது இந்த நேசத்தின் வரம்...