நீ வீசிச் செல்லும்
அந்த புன்னகைப் பூக்கள்
என் மீது பட்டுத் தெறிக்கும்
முதல் மழையாய்
என்னை சிலிர்க்க வைக்கிறது...
நீ புன்னகைக்கு பிறந்தவளோ
உன்னில்
இப்படி நிறைந்து இருக்கிறது அது
எப்போதும் எங்கேயும் வசீகரிக்கிறாய் ...
உன் கண்ணில் நிறைந்து வழியும்
அந்த குறும்பு
உன் இதழில் இறங்கி
புன்னகையாய் சிரிக்கும்போது
நான் சிறைபட்டு போகின்றேன்...
தூக்கத்தில் இருந்த என்னை
எழுப்பி உட்கார வைத்து
சிரித்து சிதறடிக்கிறாய்
என் கனவில்...
ஒவ்வொரு முறை
நீ சிரிக்கும்போதும்
உன் கன்னத்தில்
சிவந்து எழும் அந்த மேடுகளிலும்
விழும் அந்த சின்னக் குழிகளிலும்
நான் தடுமாறி விழுகின்றேன்..
நீ எங்கிருந்தாலும்
உன் புன்னகையை நினைக்கையில்
என் முகம்
தானாய் மலர்கிறது
ஒரு புன்னகையாய்...
உன்னில் பொங்கும்
அந்த வெள்ளை புன்னகையில்
என்னை மறந்து போவதும்
சுகமாய் இருக்கிறது...