Thursday 14 June 2012

வாத்தைகளற்ற மௌனமாய்


உனக்காக வார்த்தைகளை
பொறுக்கி
அழகாக கோர்த்துக் கொண்டிருக்கிறேன்..

உன்னை உறுத்தும்
என நினைத்த வார்த்தைகளை
ஒதுக்கிவிட்டு
வார்த்தைகளை பொறுக்குகிறேன்...

அதை மட்டும் சொல்லாதே
என நீ தடுத்து நிறுத்திய
வார்த்தைகளை முழுங்கிவிட்டு
மீதமிருக்கும் வார்த்தைகளை கோர்க்கின்றேன்...

உன் வலி
உன் பயம்
உன் கவலை
இதை உணராதவனாகவே இருந்தாலும்
அறிந்து புரிந்தவன் நான்
அதற்கான வார்த்தைகளை
வடிகட்டி தனியாக எடுத்து வைக்கின்றேன்...

மௌனம் அழகென்று
நீ எத்தனை முறை சொன்னாலும்
நீ மௌனத்திருப்பது
வலி பொறுக்க முடியாமல்
என்பதை அறிந்தவன் நான்
எனக்கும் அது வலிக்கத்தான் செய்கிறது...

வலிகளை
உன் நினைவிற்கு கொண்டுவருமென
நிறைய வார்த்தைகளை
நான் மறந்துவிட்டேன்...

உன்னை காயப்படுத்தாமல்
உன்னோடு பேசவே முயற்சிக்கிறேன்
ஆனாலும்
உன்னை காயப்படுத்திவிட்டே விழிக்கிறேன்...

உனக்கான வார்த்தைகளென்றும்
உனது நேசத்திற்கான வார்த்தைகளென்றும்
நிறைய வார்த்தகளை
என்னிடமிருந்து
பறித்து வைத்துக்கொண்டாய்
நான் தவிக்கிறேன் இங்கு
என்னை சொல்ல முடியாமல்...

இப்படியாக
வார்த்தைகளால்
உன்னை வார்த்தெடுக்க முனந்து
எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு
மௌனமாய் உன்னோடு
வார்த்தைகளற்று...