கொஞ்சம் ஊடல்
கொஞ்சம் சிணுங்கல்
உன் அருகாமை தந்த சுகத்தில்
சில நாள்
அவளை -
என் கடல் தோழியை
பார்க்க செல்லவில்லை
இன்று
உன் நினைவின் தவிப்பை தணிக்க
அவளிடம் போனால்
கொஞ்சம் ஊடல்
கொஞ்சம் சிணுங்கல்...
கெஞ்சி கொஞ்சி
அலைகளோடு ஓடி விளையாடி
அவள் அருகில்
கதை பேசி அமர்ந்தேன்....
அன்று நீயும் நானும்
அமர்ந்த அதே இடத்தில...
ஏதோ ஒரு நினைப்பு
அன்று உன்னை தீண்டிய
அந்த ஆயிரம் கோடி மணல்களில்
ஒன்றாவது என்னை தீண்டும் என்று...
ஆனந்த ஆட்டம் போட்டாள்
இனிதாக இசை படித்தாள்
அந்த நட்சத்திரங்கள்கூட
உன்னை தேடி வந்து
கண் சிமிட்டின
என்னை முழுதும் தெரிந்தவள்
என் கடல் தோழி
என் வலி உணர்ந்தாள் போலும்....
தன்னுள் தேக்கி வைத்த
உன் வாசத்தை என்னுள் வீசினாள்...
அன்று அவள் வரைந்த
உன் அழகு உருவத்தை
என்னருகில் இருத்தினாள்...
என் மேல் நீ கொண்ட காதலை
அவளிடம் சொன்னாயோ
இன்று அதன் ஆழத்தை
என்னிடம் வியந்து சொன்னாள் -
நானும் நன்றாய் உணர்ந்து கொண்டேன்...
உன்னிடம்
என் காதலை
சேர்க்கச் சொன்னேன்
இரு வருகிறேன் என்று
தென்றலில் ஏந்தி விரைந்தாள்
நானும் காத்திருந்தேன் - வெகுநேரம்...
ஓடோடி வந்தாள்
வெள்ளை முந்தானை காற்றில் அலைபாய
பெருமூச்சு விட்டபடி -
உன் காதோரம் அவள் சொன்ன என் காதலுக்கு
நீ தந்த காதல் முத்தத்தை
அதன் ஈரம் காயாமல்
சுகமான வெப்பம் குறையாமல்
தன்னுள்ளே இருத்தி
ஓடோடி வந்து
என் கன்னம் சேர்த்தாள்...
என் இனிய காதலியே
உன்னை நான்
காதலிக்கிறேன்...
No comments:
Post a Comment