Saturday 1 October 2011

விடை தெரியாத கேள்விகளோடு


திரும்பிப் பார்த்து
சிரிக்க முயன்று தோற்று போகும்
அந்த உனது பார்வை
என்னை கலங்க அடிக்கிறது
கை தூக்கி
நீ காட்டும்
அந்த சைகை
வந்து அள்ளிக் கொள்
என்பது போலவே இருக்கிறது...

திரும்ப வந்துவிடு
நான் ஏந்திக் கொள்கின்றேன்
என்று உரக்க
கத்த வேண்டும் போல் இருக்கிறது...

எத்தனைதான் சமாதானம் சொன்னாலும்
இந்த மனம் கேட்க மறுக்கிறது
இது பிரிவுதான் என்பதை
சொல்லிக் கொண்டே இருக்கிறது...

ஏனோ தெரியவில்லை
பயமாய் இருக்கிறது
நீ சொன்ன இந்த வார்த்தைகளில்
உன் கலக்கம் தெரிந்தது
செயலற்றுபோய்
செய்வதறியாமல் நானும்...

என் கைகளை
நீ பற்றிய
இருக்கத்தில்
ஆயிரமாயிரம் வார்த்தைகள்
நீ சொல்லமுடியாத கண்ணீர்
உன் உள்ளங்கையின்
ஈரத்தில்...

ஒரு அணைப்பாலும்
நேசத்தின் முத்தத்தாலும்
நான் இருக்கிறேன்
என்று
சொல்லத்தான் விழைகின்றேன்
முடியவில்லை
சந்தர்ப்பமும் அனுமதிக்கவில்லை...

முற்றுப் பெறாத
உனது வார்த்தைகளும்
கண்களில்
தெரியும் கேள்விகளும்
பிரிவின் வலியை
மீண்டும் உணர்த்துகின்றன
எத்தனை முறை ஆனாலும்
புதிதாக
அதே வீரியத்தோடு
பழக்கத்திற்கே
வர மறுக்கிறது
பிரிவின் வலி மட்டும்...

எல்லாம் புரிந்தும்
ஏதும் முடியாமல்
காலத்தின் கட்டாயத்தில்
உன்னை மட்டும் தனியாக
உனது நம்பிக்கையோடு
உனது நாளைக்குள்
வழி அனுப்பிவிட்டு
எனது நாளைக்காக
காத்திருக்கிறேன்
விடை தெரியாத
கேள்விகளோடு



1 comment:

Ranioye said...

pona pin enna pulambal :)
kavithai arumai !

Post a Comment